செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பலி

Published On 2016-10-17 15:08 IST   |   Update On 2016-10-17 15:08:00 IST
பாபநாசம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் உள்பட 2 பேர் பலியாயினர்

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் ரெயில் கேட் அருகே வசித்து வருபவர் ராஜாமணி. இவரது மனைவி வைரம் (வயது 70), இவர் நேற்று இரவு மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரெயிலில் ஏறி பாபநாசத்தில் இருந்து தாராசுரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் தூங்கிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தாராசுரத்திற்கு ரெயில் வந்தது தெரியாமல் ரெயிலிலேயே இருந்துள்ளார். அப்போது அருகில் இருந்த சிலர் தாராசுரம் வந்துவிட்டதாக அவரிடம் கூறி உள்ளனர்.

இதையடுத்து அவசர அவசரமாக ரெயிலில் இருந்து இறங்குவதற்காக சென்ற போது ரெயில் கிளம்பிவிட்டது.ரெயில் மெதுவாக செல்கிறது எப்படியும் இறங்கிவிடலாம் என நினைத்து கீழே இறங்கி உள்ளார். அப்போது ரெயிலுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கும்பகோணம் ரெயில்வே போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் சுந்தரபெருமாள் கோவில் அண்டகுடி ரெயில்கேட் அருகே இன்று காலை தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற முதியவர் ஒருவர் அந்த வழியாக வந்த விரைவு ரெயில் மோதி இறந்தார். அவரது உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைகாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த 2 விபத்துகள் குறித்தும் கும்பகோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News