செய்திகள்

ராயபுரத்தில் நகைக்கடை அதிபரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது

Published On 2016-10-16 10:19 GMT   |   Update On 2016-10-16 10:19 GMT
ராயபுரத்தில் நகைக்கடை அதிபரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம்:

ராயபுரம் ஆதாம் சாகிப் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் செயின். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை நடத்தி வந்தார்.

கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று நகை வாங்குவது போல் நகை கடைக்கு வந்தனர். பின்னர் ரமேஷ் செயினை கத்தியை காட்டி மிரட்டி கட்டி போட்டனர். அவரது வாயை டேப்பால் ஒட்டினர்.

பின்னர் கடையில் இருந்த ரூ. 10 லட்சம் பணம், 5½ கிலோ தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சாம்சன் சேவியர் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராயபுரம் எம்.எஸ். கோவில் தெருவில் உள்ள ஒரு கடையில் கேமிராவில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அந்த எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நீலாங்கரையை சேர்ந்த சரவணன், பூம்புகார் நகரை சேர்ந்த கெண்டர் ஸ்டான்லின், திருவான்மியூரை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 3 பேரும் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

உடனே அவர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் இந்த கொள்ளைக்கு சதி திட்டம் தீட்டியது ரமேஷ் செயினின் எதிர் வீட்டை சேர்ந்த ரஞ்சித், அவரது நண்பர் பார்த்திபன் என தெரியவந்தது. பார்த்திபன் அதே பகுதியில் கால்சென்டர் நடத்தி வருகிறார்.

இவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News