செய்திகள்

செய்யாறு அருகே தம்பதிக்கு கத்தி வெட்டு: தொழிலாளி கைது

Published On 2016-10-15 11:22 GMT   |   Update On 2016-10-15 11:22 GMT
செய்யாறு அருகே தம்பதியை கத்தியால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள அனக்காவூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கந்தன் (வயது 38). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (32). செய்யாறு சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் திருவேங்கடம் (37). கூலித்தொழிலாளி.

நேற்று வீட்டில் இருந்த திருவேங்கடம், கந்தன் வீட்டிற்கு போன் செய்தார். போனை கந்தன் எடுத்து பேசியதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கடிந்து கொட்டினார். பதிலுக்கு கந்தனும் திட்டியதால், திருவேங்கடம் ஆத்திரமடைந்தார்.

கந்தனை வீடு தேடிச் சென்று சரமாரியாக அடித்து, உதைத்தார். அப்போதும், ஆத்திரம் தீராமல் இருந்த திருவேங்கடம் கத்தியால் கந்தனை தாக்கினார். இதில், கந்தனின் காது துண்டானது. கையிலும் கந்தனுக்கு பலத்த வெட்டு காயம் விழுந்தது.

தாக்குதலை தடுக்க முயன்ற கந்தனின் மனைவி சித்ராவுக்கு கத்தி வெட்டு விழுந்ததில் கை விரல் ஒன்று துண்டானது. சிகிச்சைக்காக கணவன், மனைவி 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கந்தன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து, அனக்காவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News