செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே 4 வாகனங்கள் மோதல்: 20 பேர் படுகாயம்

Published On 2016-10-14 08:22 GMT   |   Update On 2016-10-14 08:22 GMT
அச்சரப்பாக்கம் அருகே 4 வாகனங்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:

தொடர்விடுமுறைக்கு பின்னர் தென்மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவு உள்ளது.

இன்று காலை அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழுப்பேடு சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது சென்னை நோக்கி வந்த கார் வேகத்தடையில் மெதுவாக ஏறி இறங்கியது.

அந்த நேரத்தில் பின்னால் வந்த 2 அரசு பஸ்கள் மற்றும் மற்றொரு வாகனம் கார் மீது அடுத்தடுத்து மோதின.

இதில் காரில் இருந்த 3 பேர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய 4 வாகனங்களும் சேதம் அடைந்தன.

உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு மதுராந்தகம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News