புதுக்கோட்டையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை:
மின்சார வாரியத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தமிழக அரசு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் மின் வாரிய ஊழியர்கள் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் வட்டத் தலைவர் வி.அரசுமுகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், துணைத் தலைவர்கள் எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், சங்கத்தின் திட்டச் செயலாளர் கு.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பி.ஆவுடைமுத்து, எம்.கலியபெருமாள், ஆறுமுகம், நடராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்திற்கும், உள் கட்டுமான வளர்ச்சிக்கும் அச்சாணிகளாக உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை தமிழக அரசு புறக்கணிக்கக்கூடாது. பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.