செய்திகள்

நெய்வேலியில் காண்டிராக்டர் மனைவி தற்கொலை: பெண் போலீஸ் மீது பரபரப்பு புகார்

Published On 2016-10-03 16:19 IST   |   Update On 2016-10-03 16:19:00 IST
நெய்வேலியில் காண்டிராக்டர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பெண் போலீஸ் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். காண்டிராக்டர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 38). இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், ஹரிஸ் (10) என்ற மகனும் உள்ளனர். ஜனனி 10-ம் வகுப்பும், ஹரிஸ் 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

செல்வக்குமாருக்கும் ராஜலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமி தன் பிள்ளைகளை விட்டு விட்டு நெய்வேலி புதுநகர் 20-வது வட்டத்தில் உள்ள தனது தந்தை சேரபாண்டியன் வீட்டுக்கு வந்து விட்டார்.

சேரபாண்டியன் என்.எல்.சி.யில் வேலைபார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். ராஜலட்சுமி தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார்.

இன்று காலை வீட்டின் முன்பு உள்ள புளியமரத்தில் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சேரபாண்டியன் தன் மகளின் பிணத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

ராஜலட்சுமி பிணமாக தொங்கிய புளியமரத்தின் அருகில் கடிதம் கிடந்தது. அதைபோலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ராஜலட்சுமி எழுதியிருந்தார். அதில் அவர் பெண் போலீஸ் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது:-

எனது கணவர் செல்வகுமார் என்னுடன் வாழ மறுக்கிறார். பெண் போலீஸ்காரர் ஒருவருடன் வாழ நினைக்கிறார். என்னையும் என் பிள்ளைகளையும் கொல்ல திட்டமிட்டுள்ளார். அவருக்கு துணையாக நின்ற அவருடைய உறவினர்கள் என் சாவுக்கு காரணம் என்பதை சுயநினைவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை சிலர் அவதூறாக பேசினார்கள். எனக்கு மனஉளச்சல் ஏற்பட்டது. எனவே நான் இந்த முடிவை எடுத்தேன். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது குழந்தைகள் ஜனனி, ஹரிஸ் ஆகியோருக்கு அந்த கடிதத்தில் ராஜலட்சுமி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் உன் அப்பா(செல்வராஜ்) என்மீதும், என்குடும்பத்தார் மீதும் சொல்வதை கேட்க வேண்டாம்.

என் அம்மா, அப்பாவை மட்டும் நம்ப வேண்டும். தாத்தா, பாட்டி சொல்வதை கேட்டு வாழ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜலட்சுமி எழுதி வைத்த கடிதம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறனர்.

Similar News