செய்திகள்

வேடந்தாங்கல் சரணாலயம் இன்று திறப்பு: பெரியவர்களுக்கு ரூ.5- சிறியவர்களுக்கு ரூ.2 கட்டணம்

Published On 2016-09-30 15:37 IST   |   Update On 2016-09-30 15:37:00 IST
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்பட்டது.
மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வழக்கமாக அக்டோபர் 2-வது வாரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்படும். ஏப்ரல் மாதம் வரை இது திறந்து இருக்கும்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் உத்திரமேரூர், கிளியாற்று ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரி பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் வேடந்தாங்கல் சரணாலய பகுதி பறவைகள் தங்கும் சீதோ‌ஷண நிலைக்கு மாறியது. இதையடுத்து இலங்கை பர்மா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பறவைகள் முன்கூட்டியே அங்கு வரத்தொடங்கின.

இதில் நத்தை கொத்தி நாரை, சாம்பல் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வக்கா, நீர்காகம், பாம்பு தாரா, மிளிர்உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை பறவைகள் முக்கிய மானவை. அவைமரத்தின் உச்சியில்அமர்ந்து இருப்பது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயத்தை முன்கூட்டியே திறக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சென்னை வன உயிரின காப்பாளர் கீதாஞ்சலி, வேடந்தாங்கல் சரணாலயத்தை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்க உத்தரவிட்டார்.

பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புகைப்பட காமிராவுக்கு ரூ25, வீடியோ காமிராவுக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். தினமும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை சரணாலயம் திறந்து இருக்கும்.

முதல் நாளிலேயே ஏராளமானோர் சரணாலயத்திற்கு வந்து பறவைகளை ரசித்து சென்றனர்.

தொடர்ந்து வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளன. தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Similar News