சிதம்பரத்தில் ரெயிலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
சிதம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சிதம்பரம் பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து அதிரடி விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் சிதம்பரம் இந்திராநகரை சேர்ந்த வேல்ராஜ் என்று தெரியவந்தது.
மேலும் கடந்த 5.1.2016-ல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சிதம்பரத்தில் நின்றபோது ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ரஞ்சிதம் என்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியை அவர் பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதையொட்டி வேல்ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலி கைப்பற்றப்பட்டது.
பின்னர் சிதம்பரம் நீதிமன்றத்தில் வேல்ராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.