செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: மாணவி பலி

Published On 2016-09-26 11:35 IST   |   Update On 2016-09-26 11:35:00 IST
சோழிங்கநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதலில் மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

துரைப்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் குமரன் நகரில் வசித்து வருபவர் திருமலை. லாரி டிரைவர். இவரது மகள் விசித்ரா (வயது 7). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் தீபக் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இவர்களது சொந்த ஊர் செங்கல்பட்டு ஆகும்.

பள்ளியில் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து திருமலை, இன்று அதிகாலை மகன்- மகளுடன் மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டுக்கு புறப்பட்டார்.

சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது

இதில் திருமலை, விசித்ரா, தீபக் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த விசித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கிண்டி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News