செய்திகள்

மயிலாடுதுறை அருகே வீட்டில் தொழுகை செய்த 3 பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு

Published On 2016-09-24 19:55 IST   |   Update On 2016-09-24 19:55:00 IST
மயிலாடுதுறை அருகே வீட்டில் தொழுகை செய்த 3 பெண்களிடம் 12 பவுன் நகையை மர்ம கும்பல் பறித்து சென்றனர்.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை அரங்கக்குடி பகுதியை சேர்ந்தவர் கமாருதீன். இவரது மனைவி சகீலா நாச்சியா(வயது 45).

இவர் நேற்று இரவு தனது வீட்டில் கதவை திறந்து வைத்து தொழுகை செய்து கொண்டு இருந்தார். இதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சகீலாவின் வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு சகீலா உள்பட 3 பெண்கள் தொழுகை செய்து கொண்டு இருந்தனர். அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த 12 பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து 3 பேரும் அவர்கள் வீட்டின் சன்னல் வழியாக சத்தம் போட்டு உதவி கேட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து விட்டனர்.

இது குறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தொழுகை நாளில் இந்த திருட்டு நடைபெற்று இருப்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News