செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வீடுகளில் புகுந்து துணிகர கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2016-09-24 14:36 IST   |   Update On 2016-09-24 14:36:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஏகனாபுரம் ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவாஜி. நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பெருமாள் கோவில் தெருவுக்கு வந்தது. அவர்கள் டவுசர் மட்டும் அணிந்து இருந்தனர். உடல் முழுவதும் எண்ணெய் தடவி இருந்தனர்.

6 பேரும் 3 பிரிவாக பிரிந்து ஒவ்வொரு வீட்டு உள் தாழ்பாளை உடைத்து புகுந்தது. சிவாஜி வீட்டுக்குள் சென்ற கொள்ளையர் அங்கு தூங்கி கொண்டிருந்த அவரது மகள் சீதா கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை வெட்டி எடுத்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியம்மாள் கழுத்தில் இருந்த தாலி செயினை வெட்டிய போது அவர் விழித்து கொண்டார். அவரை கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி நகையுடன் தப்பியது.

பின்னர் பச்சையப்பன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை கொள்ளையடித்து சென்றது.

பின்னர் அருகில் உள்ள ஒத்தவாடை தெருவில் வசிக்கும் சேகர், லட்சுமி, ஆனந்தன் ஆகியோரின் வீட்டு தாழ்பாளை உடைத்து புகுந்தனர். சேகர் வீட்டில் பீரோவை உடைத்த போது சத்தம் கேட்டு அவர் முழித்து கொண்டார். கொள்ளையர்களை பார்த்ததும் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

இதனால் கொள்ளையர்கள் 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பொது மக்களிடம் பிடிபடாமல் இருக்க கொள்ளையர்கள் உடலில் எண்ணெய் தடவி வந்து உள்ளனர்.

கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்பட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News