செய்திகள்
பழனிவேல்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த போலீஸ்காரர் உடல் உறுப்புகள் தானம்

Published On 2016-09-21 10:55 IST   |   Update On 2016-09-21 10:55:00 IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த போலீஸ்காரரின் உடல் உறுப்புகளான கண், இருதயம், சிறுநீரகம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
கடலூர்:

கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 33). ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இவர் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புதுவை மாநில பகுதியான முள்ளோடை அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இரவு 11.30 மணி அளவில் பழனிவேல் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பழனிவேலுவின் பெற்றோரிடம் பேசினார்கள். அப்போது அவர்கள் பழனிவேல் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக தெரிவித்தனர்.

அதன்படி நேற்று அவருடைய உடல் உறுப்புகளான கண், இருதயம், சிறுநீரகம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளை குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

தொடர்ந்து இறந்த பழனிவேலின் உடலை அடக்கம் செய்வதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் கொண்டு வந்தனர்.

இது பற்றி பழனிவேல் தந்தை வெங்கடேசன் கூறுகையில், மூளைச்சாவு அடைந்த என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மண்ணில் புதைந்து வீணாகி போவதற்கு பதிலாக, அவருடைய உடல் உறுப்புகளால் சிலர் உயிர் பெற்றால், அவர்களோடு என் மகன் வாழ்வான் என்றார்.

இறந்த பழனிவேலுக்கு சுஜாதா என்கிற மனைவியும், சிவசுஜித் (3) என்கிற மகனும், சஞ்சனாஸ்ரீ என்கிற 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

Similar News