செய்திகள்

கடலூர் அருகே பஞ்சாயத்து ஊழியரின் 2 மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு: போலீசார் விசாரணை

Published On 2016-09-19 12:17 IST   |   Update On 2016-09-19 12:17:00 IST
கடலூர் அருகே பஞ்சாயத்து ஊழியரின் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம கும்பல் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் எம்.பி. அகரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), பஞ்சாயத்து ஊழியர்.

நேற்று இரவு இவர் தனது மனைவி ஷீலா (25), தாய் நாகரத்தினம் (60), 3 மாத கைக்குழந்தை வைஷ்ணவி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டுமுன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தார்.

நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். சரவணன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாகின. பின்னர் அந்த தீ வீடு மீதும் பற்றியது. இதனால் அந்தபகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமானது.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த சரவணன் திடுக்கிட்டு எழுந்தார். மனைவி, மகள், தாய் ஆகியோருடன் அவர் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இது குறித்து தூக்கணாம் பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பஞ்சாயத்து ஊழியரின் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம கும்பல் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Similar News