செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்து கொன்ற மகன்

Published On 2016-09-16 18:30 IST   |   Update On 2016-09-16 18:30:00 IST
ஜெயங்கொண்டம் அருகே தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர்   மாவட்டம், ஜெயங்கொண்டம்   அருகே உள்ள  கல்லாத்தூர், தெற்கு தெருவை  சேர்ந்தவர்  புகழேந்தி  (வயது 45),  கூலித் தொழிலாளி.இவரது மனைவி அமுதா (42), இவர்களுக்கு  2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

புகழேந்தியின்  தந்தை  கடந்த சில வருடங்களுக்கு முன்பு  இறந்து விட்டார். இதனால்  அவரது  தாய் மணிமேகலை  புகழேந்தியுடன் வசித்து  வந்தார்.

இந்த நிலையில்  புகழேந்தி தினமும்  மது அருந்தி விட்டு வீட்டிற்கு   வருவது வழக்கம். அதேபோல் நேற்றும் மது அருந்தி வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது மனைவி அமுதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்  கோபம்  அடைந்த அமுதா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

அப்போது வீட்டில் இருந்த தாய் மணிமேகலையிடம் புகழேந்தி குடிப்பதற்கு  பணம் கேட்டுள்ளார். மணிமேகலை  தன்னிடம்  பணம் இல்லை என்று   கூறவே, ஆத்திரம்  அடைந்த  அவர் குடிபோதையில் கீழே கிடந்த உருட்டுக்கட்டையை    எடுத்து மணிமேகலையை சரமாரி  தாக்கியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த  மணிமேகலை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இது  குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர். பின்னர் மணிமேகலையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News