செய்திகள்

சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு 1 வயது குழந்தை பலி

Published On 2016-09-16 11:23 GMT   |   Update On 2016-09-16 11:23 GMT
சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு 1 வயது குழந்தை இன்று பரிதாபமாக இறந்தது.
சேலம்:

சேலம் பஞ்சந்தாங்கி ஏரி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் தர்மன் (வயது 25). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி விமலா (19). இந்த தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை திவ்யஸ்ரீ (1).

இந்த குழந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டது. இதையடுத்து தர்மன் குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை சற்று தேறி உள்ளது.

பின்னர் குழந்தையின் உடலில் ரத்தம் குறைவாகவும், சளி தொல்லை இருப்பதாகவும் கூறிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் அனுப்பி வைத்தனர். குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்த உறவினர்கள் காய்ச்சல் குறைந்ததால் சளிக்கு மட்டும் மருந்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தர்மன் உடனே அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றார். அங்கு சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் இரவு முழுவதும் காய்ச்சல் இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை குழந்தை திவ்யஸ்ரீ திடீரென இறந்தது. இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த ஏரளமானோர் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News