செய்திகள்

காட்டாங்கொளத்தூரில் விடுதலை சிறுத்தைகள்- புரட்சி பாரதம் கட்சியினர் கோஷ்டி மோதல்

Published On 2016-09-12 12:34 IST   |   Update On 2016-09-12 12:34:00 IST
காட்டாங்கொளத்தூரில் முன்விரோதம் காரணமாக விடுதலை சிறுத்தைகள்- புரட்சி பாரதம் கட்சியினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:

தாம்பரத்தை அடுத்த காட்டாங்கொளத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சியினருக்கு இடையே அரசியல் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களுக்கிடையேயான இந்த விரோதம் கோஷ்டி மோதலாக மாறியது. காட்டாங்கொளத்தூர், திருப்பன ஆழ்வார் தெருவில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மூர்த்தி மற்றும் சிலர் தகராறு செய்தனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதனால் அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேகே போட்டு விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது.

பின்னர் காட்டாங்கொளத்தூர், திருவள்ளுவர் தெருவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் முத்தையாவின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

இச்சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருப்பன ஆழ்வார் தெருவில் 4 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் காட்டாங் கொளத்தூருக்கு விரைந்து சென்றனர். அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முத்தையா, சின்னமலை, கார்த்திக், சுரேஷ், மூர்த்தி ஆகிய 5 பேரும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஆனந்த், பாலகிருஷ்ணன், தியாகு, சுரேஷ், இன்னொரு ஆனந்த் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் காட்டாங்கொளத்தூரில் பதட்டம் நிலவுகிறது.

Similar News