வேதாரண்யம் அருகே ஆட்டை கொன்றதாக மோதல்: 3 பேர் படுகாயம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் புருஷோத்தமன். இவர் தேத்தாகுடி கிராமத்தில் உள்ள குளுந்தாளம்மன் கோவிலுக்கு ஒரு ஆட்டு கிடாவை வேண்டி வளர்த்து வந்தார்.
அந்த ஆட்டு கிடா சமீபத்தில் இறந்து விட்டது. இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் புருஷோத்தமன் அருகில் உள்ளவர்கள்தான் ஆட்டு கிடாவை கொன்று விட்டார்கள் என்று கூறி உள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் காமராஜ் என்பவர் ஏன் அனாவசியமாக திட்டுகிறாய் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கட்டையால் தாக்கி கொண்டனர்.
இதில் காயமடைந்த காமராஜ் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் காயமடைந்த புருஷோத்தமன், சுப்பிரமணியன் ஆகிய இருவரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் புருஷோத்தமன், சுப்பிரமணியன், அமிர்த லிங்கம் ஆகியோர் மீதும், சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் காமராஜ் மற்றும் அவரது மனைவி சுந்தரம்பாள் ஆகியோர் மீதும் தனித்தனியே வேட்டைக் காரனிருப்பு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.