நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமம், சுனாமி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அன்பு (29). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
நேற்று மாலை இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வானகிரியில் இருந்து சந்திரபாடி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது தரங்கம்பாடி உப்பனாற்று அருகே ஒரு நாய் குறுக்கே வந்ததால் இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அன்பு காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமாருக்கு, மகேஸ்வரி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.