செய்திகள்

வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து தென்னலக்குடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: முதல்-அமைச்சருக்கு மனு

Published On 2016-08-21 23:10 IST   |   Update On 2016-08-21 23:10:00 IST
வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து தென்னலக்குடி செல்லும் சாலையை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.

சீர்காழி:

மயிலாடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில்- தென்னலக்குடி செல்லும் 5கி.மீ தூரம் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் திருவெண்காடு, கீழபெரும்பள்ளம், பூம்புகார் மற்றும் திருநள்ளாறு, காரைக்கால், நாகப்பட்டினம் செல்ல மேற்கண்ட சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தென்னலக்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது சூரக்காடு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நூறாண்டுகள் பழமையான பாலம் பழுதடைந்து மாற்றாக புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை போக்குவரத்துக்கு தென்னலக்குடி சாலையை பயன்படுத்திவருகின்றனர். இந்த சாலை கடந்த ஆண்டுதான் அமைக்கப்பட்டது. தரமற்ற சாலையை அமைத்ததால் தற்போது தென்னலக்குடி சாலை பழுதடைந்து மோசமாக உள்ளது.ஆகையால் வைத்தீஸ்வரன் கோவில்-தென்னலக்குடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News