செய்திகள்

நிலத்தை விற்பதாக கூறி ரூ.7 கோடி மோசடி: திருச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2016-08-17 07:22 GMT   |   Update On 2016-08-17 07:22 GMT
திருச்சியில் கிறிஸ்தவ சபை நிலத்தை விற்பதாக கூறி ரூ.7 கோடி மோசடி செய்ததாக பாதிரியார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியில் ஏ.ஜி.கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை ரூ.7 கோடிக்கு விற்பதற்காக திருச்சி மேலபுதூரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் கடந்த 2011-ம் ஆண்டு கிறிஸ்தவ சபையின் பாதிரியார் நார்மன் பாஸ்கர் ஒரு ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தப்படி தனியார் நிறுவனம் ரூ.6 கோடியே 88 லட்சத்தை வங்கி மூலம் சபைக்கு செலுத்தியது.

இந்த நிலையில் மீதமுள்ள ரூ.12 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு நிலத்தை எழுதி தரும்படி பாதிரியார் நார்மன் பாஸ்கரிடம் தனியார் நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது.

ஆனால் அவர் மீதமுள்ள பணத்தை திரும்ப பெறாமலும், நிலத்தை எழுதி கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் இருந்தார். அவர் ரூ.6 கோடியே 88 லட்சத்தை மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி தனியார் நிறுவனத்திடம் பணம் பெற்று நிலத்தை கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்ததாக பாதிரியார் நார்மன் பாஸ்கர் மற்றும் சபையை சேர்ந்த ஸ்டான்லி மாணிக்கராஜ், ஸ்டீபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ், மோகன் ஆகிய 5 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் விசாரித்து வருகின்றார்.

Similar News