செய்திகள்

பெருங்களத்தூரில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து: 19 பேர் காயம்

Published On 2016-08-16 07:21 GMT   |   Update On 2016-08-16 07:21 GMT
பெருங்களத்தூரில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர்
தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ஜி. எஸ்.டி. சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர் சென்றிருந்தவர்கள் இன்று காலை சென்னை நோக்கி ஏராளமான வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர்.

பெருங்களத்தூர் அருகே தனியார் ஆம்னி பஸ் வந்த போது முன்னால் சென்ற கிண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் மீது திடீரென மோதியது. இந்த வேகத்தில் அந்த வேன் முன்னால் நின்ற தஞ்சாவூரில் இருந்து வந்த அரசு பஸ் மீது மோதி நின்றது.

மேலும் அந்த அரசு பஸ் முன்னால் நின்ற கார் மீது மோதியது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஆம்னி பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையில் வேன் சிக்கி இருந்தது. இதில் அதில் இருந்த பெண்கள் உள்பட சுமார் 19 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்களுக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த அனுப்பிரியா, சித்ரா, கவுரி, கவிதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தால் ஜி.எஸ்..டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் சென்னை நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் தாமதமாக வந்து சேர்ந்தன.

Similar News