செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வாங்கி கொடுத்த புதுச்சேரி வாலிபர்-3 பேர் கைது

Published On 2016-08-12 15:51 IST   |   Update On 2016-08-12 15:51:00 IST
நாட்டு வெடிகுண்டு வாங்கி கொடுத்த புதுச்சேரி வாலிபர் மற்றும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகள், கார், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த கோவளம் நாச்சியார்குளம் அருகில் நேற்று முன்தினம் இரவு காரில் வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுரேஷ், அப்துல் சையது, சாகும் அமீது, அன்சாரி, ஆசிக் ரகுமான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கார், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. வெடி குண்டை சுரேஷ், பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி குளிர்சாதன பஸ்சில் எடுத்து வந்ததும் தெரிந்தது. கைதான 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கியூ பிரிவு போலீசார் விசாரணையும் நடந்து வருகிறது.

இதற்கிடையே அவர்களுக்கு நாட்டு வெடி குண்டை வாங்கி கொடுத்தது புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக இவர்களுக்கு உதவிய திருமுல்லைவாயல், சோழவரத்தை சேர்ந்த 3 பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதில் முக்கிய பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஒருவரின் உத்தரவுப்படி வெடிகுண்டுடன் காரில் வந்ததாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து சிறையில் உள்ள குற்றவாளியிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னரே இந்த வழக்கில் உள்ள மர்மங்கள் விலகும்.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கீரப்பாக்கத்தை அடுத்த முருகமங்கலத்தில் உள்ள கல்குவாரியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கைதானவர்களை இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்துவார்கள் என்று தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News