செய்திகள்

தாம்பரம் அருகே சொத்து தகராறில் தந்தையை குத்தி கொன்ற மகன்: போலீசார் விசாரணை

Published On 2016-08-03 12:27 IST   |   Update On 2016-08-03 12:27:00 IST
தாம்பரம் அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் குடிபோதையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:

தாம்பரம் முடிச்சூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி (57)கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மகனும் 1 மகளும் உள்ளனர். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ரங்கசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமி தனது மகன், மகளுடன் தனியாக அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இதன் பின்னர் ரங்கசாமி பார்வதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். ரங்கசாமியின் முதல் மனைவி லட்சுமிக்கும், இரண்டாவது மனைவி பார்வதிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ரங்கசாமி வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். வீட்டின் உள் பார்வதியும் அவரது மகன்களும் தூங்கினர்.

இரவு 11 மணி அளவில் ரங்கசாமி திடீர் என பயங்கரமாக அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பார்வதியும் அவரது மகன்களும் வெளியே ஓடி வந்தனர்.

அப்போது சங்கர் என்னை கத்தியால் குத்தி விட்டான் என்று கூறிவிட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரங்கசாமி இறந்தார்.

இதுகுறித்து பீர்கங்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லட்சுமியின் மகன் சங்கர் நேற்று இரவு அதே பகுதியில் மது குடித்து விட்டு போதையில் சொத்து தகராறில் தந்தையை கத்தியால் குத்தி கொன்றது தெரிய வந்தது.

போலீசார் தேடுவதை அறிந்ததும் சங்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News