செய்திகள்

வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் மாணவர் கைது

Published On 2016-07-29 13:09 IST   |   Update On 2016-07-29 13:09:00 IST
தமிழ்நாடு இயல் இசை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவான்மியூர்:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருப்பவர் வீணை காயத்ரி.

பல்கலைக்கழகத்தில் உள்ள வீணை காயத்ரியின் அலுவலகத்தில் கடந்த 24-ந்தேதி இரவு ஒரு மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது.

அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடிய அக்கும்பல் வீணை காயத்ரியின் அலுவலக மேஜை மீது கொலை மிரட்டல் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றது.

அவரது போட்டோவையும் கத்தியால் குத்தி கிழித்து இருந்தனர். சில பைல்களும் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து வீணை காய்திரி பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இயல்இசை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக வீணை காய்திரி போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார் சூறையாடியபோது அலுவலகத்தில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். அதை வைத்து முன்னாள் மாணவர்கள் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் பரணிகுமார் என்ற மாணவரின் கைரேகை ஒத்துப்போனது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவரும், மேலும் 4 பேருடன் சேர்ந்து அலுவலகத்தை சூறையாடி இருப்பது தெரிய வந்தது.

2014-ம் ஆண்டு மிருதங்க படிப்பை முடித்துள்ளார். அப்போது இசை ஆசிரியராக இருந்த சரவணன் என்பவரை ஒழுக்கமின்மை காரணமாக வீணை காயத்ரி இடமாற்றம் செய்துள்ளார்.

ஆசிரியர் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்ட பரணிகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலுவலகத்தை சூறையாடியதும், தனக்கு தங்கபதக்கம் கொடுக்காமல், வேறு மாணவருக்கு கொடுத்ததாலும் வீணை காய்திரிக்கு கொலை விடுத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Similar News