செய்திகள்

ஆசனூர் பகுதியில் யானைகளால் உயிர்கள் பலியாகும் சம்பவம் அதிகரிப்பு

Published On 2016-07-22 17:40 IST   |   Update On 2016-07-22 17:40:00 IST
ஆசனூர் பகுதியில் யானைகளால் உயிர் பலியாகும் சம்பவம் இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வன ஆர்வலர்களும் கேட்டு கொண்டுள்ளனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகிறது. இந்த யானைகள் அடிக்கடி மைசூர் ரோட்டை கடந்து செல்லும் சில சமயம் ரோட்டோரமே யானைகள் திரியும்.

இந்த நிலையில் ஆசனூர் பகுதியில் யானைகளால் உயிர் பலியாகும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

ஆசனூர் அடுத்த அரேப் பாளையத்தை சேர்ந்த பழங்குடி பெண் ஜடைச்சி (55) என்பவர் நேற்று முன்தினம் தனது ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் விறகு பொருக்கிய போது ஒற்றை யானையால் தாக்கி பலியானார்.

அவருடன் சென்ற மற்ற 4 பெண்கள் ஆளுக்கொரு திசையில் ஓடி தப்பினார். பெண்ணை தாக்கி கொன்ற யானை அதே இடத்தில் நின்றதால் உடலை மீட்க தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு யானையை விரட்டி வனத் துறையினரும், பொதுமக்களும் ஜடைச்சி உடலை மீட்டனர்.

அதே பகுதியில் இதே போல் கடந்த சில மாதத்துக்கு முன் யானைகளால் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது ஜடைச்சியை சேர்த்து 3 பேர் பலியாகி உள்ளார்.

இப்படி யானைகளால் உயிர் பலியாகும் சம்பவம் இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வன ஆர்வலர்களும் கேட்டு கொண்டுள்ளனர்.

வனப்பகுதிக்குள் விறகு பொருக்க செல்பவர்கள் அடர்ந்த வனத்துக்குள் செல்வதை தடுக்க வேண்டும். இதேபோல் ஆடு-மாடு மேய்ப்பவர்களும் வனப்பகுதி உள்ளே போக வேண்டாம். மெயின் ரோட்டோரமோ அல்லது கிராமப்பகுதி எல்லை யோரமோ மேய்க்க வேண்டும் என வன ஊழியர்கள் கேட்டு கொண்டுள்ளனர்

Similar News