செய்திகள்

காரைக்குடியில் வி‌ஷம் கொடுத்து மகள் கொலை: தாய் தற்கொலைக்கு முயற்சி

Published On 2016-07-21 16:32 IST   |   Update On 2016-07-21 16:32:00 IST
காரைக்குடியில் இளம்பெண் வி‌ஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். அவரது தாய் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருவேலங்குடி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 52). இவரது மனைவி முத்து (50).

இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் சுதா (28)வுக்கும் பெங்களூருவை சேர்ந்த வைரமுத்து என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் சிங்கப்பூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சுதாவுக்கு திடீரென மனநலம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அவர் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மகளின் நிலையை கண்டு முத்து மிகவும் மனவேதனை அடைந்தார். வாழ்வதைவிட சாவதே மேல் என நினைத்த அவர். வி‌ஷ செடியை அரைத்து சுதாவுக்கு கொடுத்துள்ளார். பின்னர் தானும் குடித்து விட்டார்.

வி‌ஷம் அருந்திய அவர்கள் வீட்டுக்குள்ளேயே மயங்கி கிடந்துள்ளார். இரவில் வீடு திரும்பிய கருப்பையா, மனைவியும் மகளும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அரைகுரை மயக்கத்தில் இருந்த முத்து, மகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் குடித்ததை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரையும் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து முத்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வி‌ஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெறுகிறது.

Similar News