செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடைபெற சாத்தியம் இல்லை: முத்தரசன் பேட்டி

Published On 2016-07-12 10:01 IST   |   Update On 2016-07-12 10:01:00 IST
பொன்னமராவதியில் சட்டப்பேரவை தேர்தலே நேர்மையாக நடைபெறாத நிலையில், உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற சாத்தியம் இல்லை என்று முத்தரசன் பேசியுள்ளார்.
பொன்னமராவதி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த தடுப்பணையை உடனே இடிக்க வேண்டும். மேலும் நதிநீர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்.

ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்க ஸ்டேட் வங்கி நிர்வாகம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் மூலம் பணம் கேட்கப்படுவதால் மாணவர்களின் பெற்றோர் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். எனவே அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தலே நேர்மையாக நடைபெறாத நிலையில், உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற சாத்தியம் இல்லை. எனினும் மக்கள் நலக்கூட்டணி தேர்தலை சந்திக்கும். புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சென்னையில் கொல்லப்பட்ட சுவாதியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இல்லை. குறிப்பாக சென்னையில் தினம் ஒரு குற்றச்செயல்கள் அரங்கேறி வருகிறது. வன்முறைதான் அதிகரித்துள்ளது. இதனை தமிழக முதல்வர் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News