செய்திகள்

சிதம்பரத்தில் இன்று நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

Published On 2016-07-09 10:39 IST   |   Update On 2016-07-09 10:39:00 IST
சிதம்பரத்தில் இன்று நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்திக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை, ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் சித்சபையிலும், மார்கழி, ஆனி ஆகிய மாதங்களில் ராஜசபையிலும் ஆனந்தநடராஜருக்கு மகாஅபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்தஆண்டுக்கான ஆனிதிருமஞ்சன விழா கடந்த 1–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை, இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெருவடைச்சான் உற்சவம் கடந்த 5–ந் தேதி இரவு விடியவிடிய கோலாகலமாக நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனிதிருமஞ்சன தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவராகிய ஆனந்தநடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் உற்சவராக புறப்பட்டு கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதே போல், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. தேரோடும் 4 வீதிகளில் வழியாக தேர் வலம் வந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். சாமி நிலைக்கு வந்தபிறகு இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் விடியவிடிய லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து, ஆனி திருமஞ்சன மகா தரிசனம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அப்போது அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆனந்தநடராஜருக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் திருஆபரண அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மேல் மகாதரிசன நிகழ்வு நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Similar News