செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும்: பழ.நெடுமாறன் பேட்டி

Published On 2016-07-08 10:16 IST   |   Update On 2016-07-08 10:16:00 IST
சிதம்பரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் தான் வழிபடவேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்:

தமிழர் பேரமைப்பின் 9-வது மாநாடு தஞ்சாவூரில் வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார்.

கூட்டம் முடிந்தபின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைமலை அடிகள் பிற மொழிகளின் ஆதிக்கத்தில் இருந்து தமிழை மீட்டு, தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கி, மக்களுக்கு உணர்வு ஊட்டினார். ஆனால் தற்போது, ஆங்கில மொழியில் சிக்கி சீரழிந்து வருகிறோம். மறைமலை அடிகள் எந்த நோக்கத்திற்காக தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கி வைத்தாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தமிழ் மொழியை அரங்கேற்றுவதற்காக இந்த மாநாடு தஞ்சையில் நடத்தப்படுகிறது.

நடராஜர் கோவிலுக்கும், தீட்சிதர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. ஆனால் நடராஜர் கோவில் அவர்களுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. நடராஜர் கோவில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், தமிழில் தான் வழிபடவேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலை மீண்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். அதற்காக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News