செய்திகள்

பயணிகள் அறையில் தங்கிய பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ் - ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை

Published On 2016-07-04 12:13 IST   |   Update On 2016-07-04 12:13:00 IST
ஈரோட்டில் உடல்நிலை சரியில்லாததால் வழியில் இறங்கிய பெண்ணிடம் இருந்த பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்துறை:

ஈரோடு பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி சரோஜா (வயது 55). இவர்களுக்கு நிர்மலா, தனலட்சுமி என்ற 2 மகள்களும், மணிகண்டன், பாஸ்கரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

மகள்கள் இருவரும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று சரோஜா கோவையில் உள்ள தனது மகள் நிர்மலாவுக்கு கொடுப்பதற்காக ரூபாய் 60 ஆயிரத்தை பர்சில் வைத்து கொண்டு ஈரோட்டில் இருந்து கோவைக்கு ஒரு பயணிகள் ரெயிலில் சென்றார்.

ரெயில் ஈரோட்டை அடுத்துள்ள தொட்டிபாளையம் பகுதியில் வந்தபோது சரோஜாவிற்கு திடீரென குளிர் காய்ச்சல் வந்தது. நடுங்கிய நிலையில் இருந்த அவரை பெருந்துறை ரெயில்வே ஸ்டேசனில் ரெயிலை நிறுத்தி இறக்கினர்.

ரெயில்வே ஊழியர்கள் சரோஜாவை தூக்கி கொண்டு அங்கிருந்த பயணிகள் வெயிட்டிங் ரூமில் படுக்க வைத்து அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்த அவரது சேலையை எடுத்து போர்த்தி விட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் சரோஜாவின் மகன் பாஸ்கரன் அங்கு வந்தார். அப்போது தனது தாயார் வைத்திருந்த பையில் மணிபர்ஸ் இல்லாதது தெரிய வந்தது. அதற்குள் இருந்த ரூபாய் 60 ஆயிரம் பணம் காணாமல் போனது கண்டு திகைத்த பாஸ்கரன் இது பற்றி அங்கிருந்த ரெயில்வே ஊழியர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறினர்.

இது பற்றி திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நிலை சரியில்லாததால் வழியில் இறங்கிய பெண்ணிடம் இருந்த பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News