சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
சிதம்பரம் நடராஜ கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று தொடங்கி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது.
உற்சவத்தையொட்டி இன்று காலை கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பட்டு நடராஜ சன்னதி கொடிமரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 9 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியர் நடேஸ்வர தீட்சிதர் கொடியேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனித்திருமஞ்சனத்தையொட்டி வருகிற 9–ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.
10–ந் தேதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேதநடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் சிறப்புபூஜையும் பஞ்மூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது. 11–ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துபல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துவருகின்றனர்.