செய்திகள்

சுவாதி கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும்: எச். ராஜா பேட்டி

Published On 2016-06-29 09:36 IST   |   Update On 2016-06-29 09:36:00 IST
சுவாதி கொலை வழக்கை போலீசார் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என எச். ராஜா கூறினார்.
சீர்காழி:

பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா வைத்தீஸ்வரன் கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தனி நபர் விரோதமாக நடந்ததா? அல்லது இதற்கு பின்னால் அமைப்பு ஏதேனும் இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஏன் என்றால் கடந்த 2 மாதமாகவே சுவாதியை பின் தொடர்ந்து ஒருவர் மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

அதே போல் சுவாதி வீட்டை சுற்றி மர்ம நபர்கள் கண்காணித்து வந்ததாக செய்தி வந்துள்ளது. எனவே போலீசார் நேர்மையான முறையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்ல வேண்டுமானால் ஐகோர்ட்டு இந்த வழக்கை தாங்களே முன் வந்து எடுத்து கொள்ள வேண்டியிருக்கும் என்று சொன்னது மட்டும் போதாது.

சுவாதி வழக்கை நேரடியாக ஐகோர்ட்டு எடுத்துக் கொண்டு ஒரு சிறப்பு விசாரணை குழு மூலமாக வரையறைக்கு உட்பட்ட நாட்களுக்குள் விசாரித்து சுவாதி குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.

சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பி அவர்களது குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதல்-அமைச்சர் சுவாதியின் கொலை வழக்கில் மவுனம் காப்பது ஏன்?

அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காதது துரதிருஷ்டவசமானது. இதற்கு காரணம் என்ன என்று புரியாத நிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.

அதே போல் போலீசாரின் அலட்சிய போக்கு தான் சேலம் வினுப்பிரியாவின் தற்கொலைக்கு காரணம்.

கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த திருமண விழாவில் இந்தியாவை உடைக்க வேண்டும் என வைகோ பேசி உள்ளார். தொடர்ந்து இதுபோல் பேசி வரும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்த தடை செய்யப்பட்ட சாதனங்களை கொண்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது முறையல்ல.

இவ்வாறு எச். ராஜா கூறினார்.

பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் சரண்ராஜ், மாநில பொது செயலாளர் நாஞ்சில் பாலு, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News