கொள்ளிடம் அருகே 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மகேந்திரப்பள்ளி சாலையில் வெட்டாற்றங்கரை உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர் முரளி. இவரது மனைவி ரேவதி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு முரளி சிங்கப்பூர் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து ரேவதி வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய ரேவதி கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதே நாளில் கொள்ளிடம் அருகே உள்ள தக்காஸ் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வெங்கடாசலபதி (வயது 50). குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மாங்கானம்பட்டு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அவரது வீட்டிலும் கதவை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழையாறு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் கோவில்களில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது.
ஒரு வாரத்தில் பல கொள்ளை சம்பவங்கள் நடந்ததால் நாகை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேற்று இரவு கொள்ளை நடந்த பகுதிகளில் ரோந்து சென்று போலீசாரை உஷார் படுத்தினார். புதுப்பட்டினம், கொள்ளிடம் போலீசாரை சந்தித்து தீவிர சோதனை நடத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.