விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்தவரால் பரபரப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், இணை இயக்குனர் (விவசாயம்) விஸ்வநாதன் (பொறுப்பு) உள்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை குறித்து மனுக்கள் கொடுத்தனர்.
இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதி பழனிச்சாமி பேசும்போது,
கரும்பு நிலுவை தொகையை விரைவில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சிறு குறு விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு கூறி உள்ளது.
ஆனால் பணத்தை கட்ட வேண்டும் என்று வங்கிகளில் இருந்து நோட்டீஸ் வருகிறது. இதற்கு தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மற்றொரு விவசாய சங்க பிரதிநிதி கணபதி கூறும்போது,
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் நடப்பதை போல, பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும் மறைமுக ஏலம் நடக்க முயற்சி செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க மரம் வெட்டப்படும் போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் கழுத்தில் ரூபாய் (ஜெராக்ஸ்) மாலை அணிந்து உள்ளே நுழைந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பாதுகாவலர்கள் தடுத்து வெளியேற்றினர்.இதுபற்றி செல்லப்பன் கூறும்போது,
‘‘இந்திய கருப்பு பணம் வெளிநாடுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை மீட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.