செய்திகள்

பள்ளிபாளையத்தில் குடிசை வீட்டுக்குள் புகுந்த பஸ்

Published On 2016-06-23 18:37 IST   |   Update On 2016-06-23 18:37:00 IST
பள்ளிபாளையத்தில் குடிசை வீட்டுக்குள் தனியார் பஸ் புகுந்ததால் தாயும்–மகனும் உயிர் தப்பினார்கள்.

ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையத்தில் கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே ரோட்டையொட்டி குடிசை வீடுகள் உள்ளன.

இன்று காலை ராசிபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் வந்துகொண்டு இருந்தது. காலை 7.30 மணி அளவில் பள்ளி பாளையம் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகே வந்த போது பஸ் திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ரோட்டோரம் உள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தது.

அந்த குடிசையில் வீரம்மாள் என்ற பெண் தனது மகன் சண்முகத்துடன் (வயது 35) வசித்து வருகிறார். இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இவர்கள் இருவரும் காலையிலேயே வேலைக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்வசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

பஸ்சை ஓட்டி வந்த தங்கராஜ் (வயது 30) என்பவர் கண்ணாடி உடைந்து காயம் அடைந்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

பஸ் திடீர் என்று குடிசை வீட்டுக்குள் புகுந்ததால் பஸ்சில் இருந்த 40 பயணிகள் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டனர்.

அப்பகுதியில் இதேபோல அடிக்கடி விபத்து நடந்து வருகிறது என்றும் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பஸ் வீட்டுக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News