செய்திகள்

சத்தியமங்கலம் அருகே கல்லூரி அருகே லாரி தலை குப்புற கவிழ்ந்தது: டிரைவர் - கிளீனர் தப்பினர்

Published On 2016-06-22 16:28 IST   |   Update On 2016-06-22 16:28:00 IST
சத்தியமங்கலம் அருகே சத்தி-அத்தாணி ரோட்டில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சத்தியமங்கலம்:

நாமக்கல்லிலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சத்தி-அத்தாணி ரோட்டில் அதிகாலை வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்த இடம் அருகே தனியார் கல்லூரி உள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால் நல்ல வேளையாக அந்த வழியாக யாரும் நடந்து செல்லவில்லை.

இந்த திடீர் விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போக்குவரத்து போலீசார் விரைந்தனர். அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது.

இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Similar News