செய்திகள்

புதுக்கோட்டையில் மாணவிகள் விடுதிக்குள் புகுந்த 7 அடி நீள பாம்பு

Published On 2016-06-21 11:29 IST   |   Update On 2016-06-21 11:29:00 IST
புதுக்கோட்டையில் மாணவிகள் விடுதிக்குள் 7 அடி நீள பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் நல மாணவிகள், அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரி திறந்து ஒரு நாட்களே ஆன நிலையில் நேற்று விடுதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் விடுதிக்குள் துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் நீளமான பாம்பு சுற்றி திரிந்ததை பார்த்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனே புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு போக்கு காட்டிய பாம்பு ஒரு பொந்துக்குள் நுழைந்து விட்டது. பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 7 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு என்பது தெரியவந்தது. விடுதியில் மாணவிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மாணவிகள் விடுதிக்குள் கருஞ்சாரை பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News