செய்திகள்

தரங்கம்பாடி அருகே காரில் கடத்தப்பட்ட 960 மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2016-06-17 16:41 IST   |   Update On 2016-06-17 16:41:00 IST
தரங்கம்பாடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சீர்காழி:

நாகை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை மேற்பார்வையில் சீர்காழி மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மயில் சாமி மற்றும் போலீசார் நேற்று இரவு தரங்கம்பாடி அருகே உள்ள ஆயப்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி ஒரு கார் வந்தது. அதனை போலீசார் நிறுத்தினார்கள். அப்போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

அதனை போலீசார் சோதனை செய்த போது அதில் 20 அட்டை பெட்டிகளில் 180 மில்லி லிட்டர் கொள்ளவு கொண்ட 960 மது பாட்டில்கள் இருந்தது.

இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். காரும் கைப்பற்றப்பட்டது. அதனை சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மதுபாட்டில்கள் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அதனை கடத்தி வந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News