செய்திகள்

வேதாரண்யம் அருகே மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்

Published On 2016-06-16 21:51 IST   |   Update On 2016-06-16 21:52:00 IST
வேதாரண்யம் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, விழுந்தமாவடி உள்ளிட்ட பல கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலுள்ள மக்கள் மீன்பிடி தொழிலை தங்களது முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திலிருந்து சாமிக்கண்ணு(55) என்ற மீனவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ்(22) கலையரசன்(19) வினித்(19) ஆகிய 3 பேரும் வெள்ளப்பள்ளத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் மீன்பிடித்து விட்டு அன்று மதியமே கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மீனவர்கள் திசைமாறி சென்று வேறு பகுதிக்கு கரை சேர்ந்தார்களா? அல்லது படகு என்ஜின் பழுதடைந்து நடுக்கடலில் சிக்கித் தவிக்கிறார்களா? இலங்கை கடற்படையினர் இவர்களை பிடித்து சென்றார்களா? என்று தெரியவில்லை. இது குறித்து கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் சென்ற படகு மட்டும் வெள்ளப்பள்ளத்திற்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் ஆள் இல்லாமல் மீன் மற்றும் வலையுடன் இருந்ததை கண்டு கடலோர காவல்படையினர் மீட்டு காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தப் படகு மாயமான 3 மீனவர்கள் பயன்படுத்திய படகு என்று சக மீனவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்களும் கடலோர காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளப்பள்ளம் கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News