செய்திகள்

திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Published On 2016-06-12 13:09 IST   |   Update On 2016-06-12 13:09:00 IST
திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பெண்ணாடம்:

திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 21). இவரது நண்பர்கள் விஜய் (18), முத்தமிழன் (21). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 11.30 மணிக்கு எழுத்தூரில் இருந்து தொழுதூருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

தொழுதூர் பஸ் நிலையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது தொழுதூரை சேர்ந்த கோகுல்ராஜ், அவரது நண்பர் ராமலிங்கம் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

திடீரென்று தமிழரசன் வந்த மோட்டார் சைக்கிளும், கோகுல்ராஜ் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன.

இந்த விபத்தில் தமிழரசனின் நண்பர்கள் விஜய், முத்தமிழன் ஆகியோர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்கள்.

தமிழரசன், கோகுல்ராஜ், ராமலிங்கம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான 2 பேரின் உடல்கள் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News