செய்திகள்

வேளச்சேரியில் பல்பொருள் அங்காடியில் 100 பவுன் நகைகள் கொள்ளையா?: போலீஸ் விசாரணை

Published On 2016-06-11 04:22 IST   |   Update On 2016-06-11 04:23:00 IST
வேளச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியின் மாடியில் இருந்த அறையில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை வேளச்சேரி மெயின் சாலையில் பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி(சூப்பர் மார்க்கெட்) உள்ளது. இந்த அங்காடியின் மாடியில் பொன்ராஜீக்கு தனியாக அறை ஒன்று உள்ளது. அதை அலுவலகம் போல் அவர் செயல்படுத்தி வந்தார்.

அந்த அறையில் உள்ள மேஜையில், பொன்ராஜ் தனது மனைவி மற்றும் தனக்கு சொந்தமான 100 பவுன் நகைகளை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த அறையில் மேஜையில் வைத்து இருந்த 100 பவுன் நகைகளை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டதாக நேற்று வேளச்சேரி போலீசாருக்கு பொன்ராஜ் தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் கிண்டி உதவி கமிஷனர் சங்கரலிங்கம், வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெரி, சேட்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

நகைகள் மாயமானதாக கூறப்படும் அங்காடியின் மாடியில் உள்ள அறையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொன்ராஜ், தனது அறையில் இருந்த 100 பவுன் நகைகள் மாயமானதாக புகார் அளித்தார்.

பல்பொருள் அங்காடியின் மாடியில் உள்ள அறைக்கு பொன்ராஜை தவிர வெளியாட்கள் யாரும் எளிதில் செல்ல முடியாது. அப்படி இருக்க 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா? என போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

மேலும் அந்த நகைகளை பொன்ராஜ் தனது வீட்டில் வைக்காமல் எதற்காக பல்பொருள் அங்காடியின் மாடியில் உள்ள அறையில் வைத்து இருந்தார்? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்து உள்ளது. இதுபற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News