செய்திகள்

திருப்போரூரில் பா.ம.க. பிரமுகர் மீது தாக்குதல்

Published On 2016-06-10 15:25 IST   |   Update On 2016-06-10 15:25:00 IST
திருப்போரூரில் பா.ம.க. பிரமுகர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணகப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் வன்னியகுமார் பா.ம.க. பிரமுகர்.

நேற்று இரவு இவர் வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது சைக்கிளில் சென்ற ஒருவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் லேசாக இடித்தனர். இதில் சைக்கிளில் சென்றவர் கீழே விழுந்தார்.

இதனை கண்ட வன்னிய குமார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் செல்போன் மூலம் பேசி நண்பர்களை வரவழைத்தனர்.

வன்னியகுமாருக்கு ஆதரவாக ஒன்றிய செயலாளரான தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி வந்தார். இதில் ஏற்பட்ட மோதலில் வன்னியகுமார், தட்சிணாமூர்த்தி மீது கல்வீசி தாக்கினர்.

தகவல் அறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு கும்பலாக இருந்த இருதரப்பினரையும் விரட்டினர்.

மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காயமடைந்த வன்னிய குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News