செய்திகள்

கூடுவாஞ்சேரியில் தாயை அடித்து கொன்ற மகன், போலீசுக்கு பயந்து தூக்குபோட்டு தற்கொலை

Published On 2016-06-09 14:50 IST   |   Update On 2016-06-09 14:50:00 IST
கூடுவாஞ்சேரியில் குடும்ப தகராறு காரணமாக தாயை அடித்து கொன்ற மகன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு:

கூடுவாஞ்சேரி, மின் வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் உன்னம்மாள் (வயது 75). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திகேயனுடன் (40) உன்னம்மாள் தங்கி இருந்தார். இவரது மனைவி பத்மாவதி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

உன்னம்மாள்- பத்மாவதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய் உன்னம்மாளை திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தார்.

ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார். இதனால் கணவருடன் ஏற்பட்ட மோதலில் கடந்த வாரம் பத்மாவதி 2 குழந்தையுடன் சாலவாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் கார்த்திகேயன் மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் மது அருந்தி வந்தார். அப்போது தாய் உன்னம்மாளுடன், மனைவி பிரிந்து சென்றது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் கயிற்றால் தாய் உன்னம்மாளின் கழுத்தை இறுக்கினார். மேலும் அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் உன்னம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் தாயை கொலை செய்ததை உணர்ந்த கார்த்திகேயன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். தாயின் கழுத்தை இறுக்கி கொன்ற அதே கயிற்றால் கார்த்திகேயனும் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை நீண்ட நேரம் வரை வீடு பூட்டிக்கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் உன்னம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் கார்த்திகேயன் தற்கொலை செய்து இருப்பதும் தெரிந்தது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாயை கொன்று மகன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News