செய்திகள்

மாமல்லபுரம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.2½ லட்சம் பணம் கொள்ளை

Published On 2016-06-09 11:46 IST   |   Update On 2016-06-09 11:46:00 IST
மாமல்லபுரம் அருகே திருமணத்திற்கு சென்றிருந்த வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த அம்பாள்நகர், வசந்தபுரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

இவரது மகளின் திருமணம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதற்காக முருகேசன் நேற்று முன்தினம் இரவே வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருமண மண்டபத்திற்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் முருகேசனின் வீட்டு பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் திருமண செலவுக்காக பீரோவில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்தனர்.

மேலும் பீரோவில் இருந்த பட்டு புடவை, குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்களையும் மூட்டை கட்டி அள்ளிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டிணத்தை சேர்ந்தவர் இப்ராகிம் ஓய்வு பெற்ற அணுமின் நிலைய என்ஜினீயர்.

இவர் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள வங்கியில் லாக்கரில் இருந்த 20 பவுன் நகை எடுத்தார். பின்னர் நகையை பைக்கின் பெட்டியில் வைத்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

அணுமின் நகரிய குடியிருப்பு பகுதியில் வந்த போது கடை அருகே பைக்கை நிறுத்தி பொருட்கள் வாங்கினார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பைக் பெட்டியை உடைத்து உள்ளே இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு பகுதியான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நகரிய குடியிருப்பில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Similar News