செய்திகள்

சான்றிதழ் வழங்காததால் அரசு பள்ளிக்கு பூட்டுபோட்டு கிராமமக்கள் போராட்டம்: தலைமை ஆசிரியை - ஆசிரியை சஸ்பெண்டு

Published On 2016-06-06 15:21 IST   |   Update On 2016-06-06 15:35:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காததால் அரசு பள்ளிக்கு பூட்டுபோட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த எழிச்சியூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 240 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளியில் அருகில் உள்ள கிராமப்புற மாணவர்களை சேர்க்க மறுப்பதாகவும், படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கவில்லை என்று தெரிவித்தும் எழிச்சியூர், பனையூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பள்ளி கதவை பூட்டு போட்டு பூட்டினர். இதனால் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் வெளியிலேயே நின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த ஆசிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் கூறும் போது, பள்ளியில் எங்கள் கிராம மாணவர்களை சேர்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் இன்னும் கொடுக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தலைமை ஆசிரியை லூர்ந்து மேரி மீது தெரிவித்தனர்.

அவரிடம் உரிய விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர் பூட்டிய பள்ளிக் கூட கதவை திறந்தனர்.

ஆனால் மாணவ- மாணவிகள் பள்ளிக்குள் செல்லவில்லை. அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்குள் சென்றனர்.

இதற்கிடையே தலைமை ஆசிரியை லூர்து மேரி, உதவி தலைமை ஆசிரியை தான்சியா, ஆகியோரை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News