செய்திகள்

நங்கநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்

Published On 2016-06-01 16:27 IST   |   Update On 2016-06-01 16:27:00 IST
நங்கநல்லூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆலந்தூர்:

நங்கநல்லூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் இன்று காலை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமை தாங்கினார். பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுகொடுத்தனர்.

இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கு தி.மு.க. பேனரும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் தலைமையில் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள், அரசு நிகழ்ச்சியில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட தி.மு.க. பேனரை அகற்ற வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் படம் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நங்கநல்லூர் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர்.

ஆனால், தி.மு.க. பேனரை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று கூறி அ.தி.மு.க.வினர் நங்கநல்லூர் மெயின் ரோட்டில் திரண்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கட்டப்பட்டிருந்த தி.மு.க. பேனர் அகற்றப்பட்டது.

அ.தி.மு.க.- தி.மு.க.வினர் போட்டி போட்டு ஜமாபந்தி நிகழ்ச்சியில் அமர்ந்து இருந்தனர். அப்போது, அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் முதல்-அமைச்சரின் படத்தை கையில் பிடித்தவாறு நின்றார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது.

Similar News