பஸ்சுக்கு காத்திருந்த அரசு பெண் ஊழியரிடம் 6 பவுன் நகை பறிப்பு
திருப்புவனம்:
திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 48). இவர், வளையங்குளத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை வேலை முடிந்து, வீடு திரும்புவதற்காக விஜயலட்சுமி வளையங்குளத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென்று விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த டாலருடன் கூடிய 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து அவர், பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
வளையங்குளம் பகுதியில் தனியே வரும் பெண்களை நோட்டமிட்டு இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாகவும், இங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.