செய்திகள்

சிவகங்கை அருகே போலீஸ் நிலையத்தை சூறையாடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

Published On 2016-05-25 02:10 IST   |   Update On 2016-05-25 02:31:00 IST
சிவகங்கை அருகே போலீஸ் நிலையத்தை சூறையாடியவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த மதகுபட்டியில் மன்னர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், விழா நடத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மதகுபட்டி போலீசார், விழா ஏற்பாட்டாளர்கள் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். இவர்களை விடுவிக்கக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, கிராமத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அக்கம்பக்கத்து கிராமத்தினரும் அங்கு வரத்தொடங்கினர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர். அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். ஒரு அரசு பஸ் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

நிலைமையை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதன்பின் கூட்டம் கலைந்து ஓடியது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயுதப்படை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 94 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Similar News