செய்திகள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நாளை பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்

Published On 2016-05-10 09:46 IST   |   Update On 2016-05-10 09:47:00 IST
பிரதமர் மோடி நாளை வேதாரண்யத்தில் பிரசாரம் செய்கிறார்.
வேதாரண்யம்:

பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) மாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் வருகிறார். அத்தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளருக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.

அவர் பேசுவதற்காக தேத்தாக்குடி பகுதியில் உள்ள சோதனை சாவடி எதிரே பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும், ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தையும் மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் ஆய்வு செய்தார். மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஏ.ஐ.ஜி. ஸ்மித்சிந்தியும் பார்வையிட்டார்.

ஹெலிபேடில் தஞ்சையிலிருந்து ஹெலிகாப்டர் வந்து இறங்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.

மோடி வருகையை யொட்டி வேதாரண்யத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் முத்துப்பேட்டை கடல் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் அந்நிய படகுகள் நடமாட்டம் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் வருகை குறித்து தெரிவிக்க மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலோர கிராமங்களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சின்னையன், சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை நகர் பகுதியில் தொடங்கி கடல் முகத்துவாரம் வரையிலும் படகு ரோந்துக்கும், கடல் முகத்துவாரத்தில் இருந்து கோடியக்கரை வரையிலும் படகு மூலமாக கண்காணிக்கவும் கடலோர காவல் படையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இதுபோல் ஊர்க்காவல் படையினர் உதவியுடன் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பும் படகுகள், கரையோரம் ஓய்வெடுக்கும் படகுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் அதிகாரிகள் முத்துப்பேட்டை மற்றும் கோடியக்கரை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

Similar News