செய்திகள்

அடியாட்களை வைத்து புதுப்பெண்ணை கடத்திய 5 பேர் கைது

Published On 2016-05-02 15:33 IST   |   Update On 2016-05-02 15:33:00 IST
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

திருத்தணியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவரது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு டவுன் பெரிய நத்தத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

2 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செங்கல்பட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 28–ந் தேதி ஆண்ட்ரூஸ் வேலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது மகேஸ்வரியை காணவில்லை.

இது குறித்து ஆண்ட்ரூஸ் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் மகேஸ்வரி செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே உள்ள காட்டு பகுதியில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று மகேஸ்வரியை மீட்டனர்.

அவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இந்த கடத்தல் தொடர்பாக செங்கல்பட்டு பெரிய நத்தத்தை சேர்ந்த கார்த்திக், அண்ணாதுரை, தினேஷ், சந்துரு, பூ பாலன் ஆகிய 5 பேர் கைது செய்ப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகேஸ்வரியை கடத்தியது அவரது உயிர் தோழி கவுரி என்று தெரிய வந்தது.

மகேஸ்வரி 2–வது திருமணம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் நண்பர்கள் கார்த்திக், அண்ணாதுரை, தினேஷ், சந்துரு, பூ பாலன் ஆகிய 5 பேர் மூலம் மகேஸ்வரியை கடத்தி உள்ளார்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கவுரியை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Similar News